சைவ உணவே மனித உணவு
இக்கட்டுரையின் நோக்கம் : இன்று பொதுவாக அசைவம் சாப்பிடுபவர் எழுப்பும் கேள்விகளுக்கு வள்ளலார் , ஞானிகள் வழி நின்று தெளிவு படுத்துவதே
கீழ்காணும் கேள்விகளுக்கான பதில்களை பதிந்துள்ளோம்.
1. சைவ உணவே மனித குல உணவு என்பது ஏன்?
2. மரத்திற்கும்/தவரத்திற்கும் உயிர் உள்ளதே? அவைகளை உண்பது மட்டும் பாவம் இல்லையா?
4. சைவ உணவின் மூலம் எல்லா சக்திகளையும் பெற முடியுமா?
5. சைவ உணவு உட்கொண்டால் தான் இறைவனை அடைய முடியும் என்றால் பின் எப்படி “கண்ணப்பநாயனார்” முக்தி பெற்றார்?
6. சைவ உணவு அல்லாது சில சித்தர்கள் அசைவ உணவு உண்டதாக சொல்வது உண்மையா?
1. சைவ உணவே மனித குல உணவு என்பது ஏன்?
இரையை மட்டும் தேடுதல் விலங்கியல். இரையோடு இறையையும் தேடுவதே மானிடவியல். சுத்த சைவ உணவினை உட்கொள்ளுதலே இறையை தேட நாம் மேற்கொள்ளும் முதல் படி.சைவ உணவு தான் இறை அருளை பெற்று தரும். சைவ உணவே சன்மார்க்க உணவு.
மனிதர்களின் உடல் அமைப்பு சைவ உணவினை உட்கொள்ள தகுந்தாற்போல் தான் அமைந்து உள்ளது. அதாவது குடலின் நீளம், பற்களின் அமைப்பு, செரிமானத்திற்கு உதவும் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அமில தன்மை ஆகிய அனைத்தும் காய், கனி, கிழங்குகளை உட்கொள்ளும் தன்மைக்கு ஏற்ப அமைந்துள்ளது. இதன் மூலம் இறைவன் நமக்கு விதித்த உணவு சைவ உணவே என்று அறிதல் வேண்டும்.
`அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு “ஜீவகாருண்யமே ” உண்மையான கடவுள் வழிபாடு’ என்று அருளுகிறார் திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான்.
மேலும் வள்ளல் பெருமான் அவர்கள் புலால் உண்பவர்கள் புறவினத்தார் என்றும்
‘உயிர்கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர், அவர் புறவினத்தார்!” என்று இறைவனே தனக்கு அருளியாதாக இயம்புகிறார்.
நோன்பு என்பது யாதெனின் “கொன்று திண்ணாமை” என்று அருளுகிறார் அவ்வை பிராட்டி.
“புலால் உண்ணாமை” என்று 10 அதிகாரங்கள் படைத்தது வாழும் நெறியினை நமக்கு அருளுகிறார் திருவள்ளுவர் பெரும்தகை.
“புலால் உண்பவர்கள் புலையர்கள் ,அவர்கள் நரகத்தினையே அடைவார்கள் “ என்று சாடுகிறார் திருமூலர் பெருமானார்.
அதனால் அரிதான மனித தேகத்தினை பெற்ற நாம் மற்ற உயிரின் மீது பரிவு காட்ட வேண்டுமே தவிர கொன்று தின்ன கூடாது.
“முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கு தாமே யாம்” – அதாவது நாம் செய்த வினைகள் நமக்கு தான் திரும்ப வரும்.
உடலை விட்டு உயிர் பிரிவதே ஆன்மாவிற்கு ஏற்படும் மிக பெரிய வலி/ துன்பம் என்பதால் தான் கொலை என்பதை மிக பெரிய ஜீவஹிம்சை என்கிறார்கள் ஞானிகள்.
கர்ம விதிக்கு ஏற்ப உணவிற்காக கொல்லப்படும் விலங்குகளின் வலியினை , துன்பத்தினை , பயத்தினை உண்பவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது இறை நியதி.
சற்று சிந்தியுங்கள் ஒருவர் வாழ்வில் அசைவத்தினை வாரம் ஒருமுறை மட்டுமே உண்டாலும் தனது வாழ்நாளில் எத்தினை உயிர் கொலை புரிகிறார். அத்தனை உயிர்கள் பட்ட வலியினை இவன் பல பிறவிகள் எடுத்து துன்பப்பட்டால் தான் தீரும்.
இதன் பொருட்டே எல்லா சித்தர்களும், ஞானிகளும் புலால் உண்பதை கண்டிக்கிறார்கள். அசைவம் உண்பவர்களுக்கு இறைஅருள் சிறிதும் கிட்டாது என்று தெளிவாக கூறி அசைவ உணவினை விட்டு , சுத்த சைவ உணவினை உட்கொள்ளுமாறு வழியுறுத்தி உள்ளார்கள்.
இன்று நமது சிந்தனையை , எண்ண ஓட்டத்தினை ,அறிவை அதிகம் தீர்மானிப்பது திரை படங்கள், தொலைக்காட்சி , இணையதளம், செய்திகள் போன்றவைகள் தான்.
நமது செயல்பாடுகளை , எண்ணத்தினை இவைகள் தான் அதிகம் தீர்மானிக்கின்றன.
இக்காலகட்டத்தில் நாம் சிந்திக்க வேண்டியது இது தான்
“எல்லாம் அறிந்த – பிறப்பு இறப்பை வென்று -இறை நிலை அடைந்த சித்தர்கள் , ஞானிகள் சொல்லை கேட்க வேண்டுமா , அல்லது பிறந்து இறக்கும் அறிவில்லா சுயநலம் மட்டுமே உள்ள மனிதர்களின் சொல்லை கேட்க வேண்டுமா என்பது தான்”.
இதனை உணர்ந்து உடனே அசைவம் உண்பதினை கைவிடுங்கள்.
2. மரத்திற்கும்/தவரத்திற்கும் உயிர் உள்ளதே? அவைகளை உண்பது மட்டும் பாவம் இல்லையா?
ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் வள்ளல் பெருமான் இதற்கான பதிலை கூறி உள்ளார்.
1. மரம் புல் நெல் முதலான சீவர்கள் பரிசமென்கிற ஓரறிவையுடைய சீவர்கள். அவ்வுடம்பில் சீவவிளக்கம் ஒருசார் மட்டுமே விளங்குகிறது.
2. தாவரங்களுக்கு மனம் முதலான அந்தக் கரணங்கள் விருத்தி இல்லை. ஆன்மாவானது மனம் முதலான கரணங்களால் சுக துக்கங்களை அனுபவிக்கின்றது. தாவரங்களில் இவைகள் விருத்தி ஆகாததால் வித்து, காய் , கனி, பூ இவைகளை எடுக்கும் சமயம் தாவரத்தில் உள்ள ஆன்மாவிற்கு துன்பம் உண்டாவதில்லை. அது உயிர்க்கொலையுமல்ல;
3. தாவரங்களின் வித்து, காய், கனி,பூ முதலியவைகளை கொள்ளும்போது சுக்கிலம் நகம் ரோமம் முதலிய வைகளை வாங்கும் போது இம்சை உண்டாகாதது போல் தாவரங்களுக்கும் இம்சை உண்டாவது இல்லை.
4. மரம், நெல், புல் போன்ற தாவரங்களின் வித்துக்களை கொண்டு நாமே உயிர் விளைவு செய்ய கூடும். வித்துக்களிடத்து ஆன்மாக்கள் ஏறுவது எப்படி யென்னில்:- நிலத்திற் கலந்த வித்திற்கு நீர்விடில் அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதியின்படி ஆன்மாக்கள் அணுத் தேகத்தோடு கூடி நிலத்திற் சென்று அந்நிலத்தின் பக்குவ சத்தியோடு கலந்து வித்துக்களினிடமாகச் செல்கின்றன வென்று அறிய வேண்டும்.
ஆகலில் மரம் புல் நெல் முதலியவைகளின் வித்து, காய், கனி, தழை முதலியவற்றைப் புசிப்பது சீவகாருணிய விரோதமல்ல என்றறிய வேண்டும்.
3. முட்டை சைவ உணவா , அசைவ உணவா?
முட்டை அசைவமே.
முட்டை என்பது கோழியின் உடலாக ஆவது. அதனால் முட்டை கோழியின் மாமிசத்திற்கு சமம்.
சிலர் கூறுவது போல பால் போன்றது அல்ல முட்டை. முட்டை கோழியின் உடலின் சிறு மாதிரி. பால் என்பது உயிர் வளர்க்க , உடல் வளர்க்க தாயினால் கொடுக்கப்படும் உணவு. எனவே முட்டை உண்பது பால் குடிப்பது போல் ஆகாது.
முட்டையினை பெறுதல் கோழிக்கும் நாம் செய்யும் ஜீவ இம்சை என்று முதலில் நாம் அறிய வேண்டும் . ஒரு தாய் தன் சேயினை காப்பது போல தான் முட்டையினை கோழி அடைகாக்கிறது.
முற்று பெற்ற மனித தாயின் கருவினை கலைப்பது போல தான் முட்டையினை உட்கொளுதல் என்று அறிய வேண்டும். அதனால் முட்டையினை உண்பதும் உயிர் கொலையே.
மணமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமான் செய்ய கூடாத கொடிய பாவங்களாக கூறும் ஒன்று :
“பட்சியை கூண்டில் அடைத்து வைத்தல்”.
இன்று முட்டை இடுவதற்காக சிறு கூண்டில் கோழியை அடைத்து வைத்து துன்புறுத்துகிறார்கள் . இதன் மூலம் பெரும் முட்டையை உட்கொள்ளுதல் பெரும் ஜீவ ஹிம்சை.
கோழியை அடைத்து வைத்து செய்யும் இம்சைகளும் முட்டையின் மூலம் உண்பவர்களுகே சென்று சேர்க்கிறது என்றும் அறிக.
முட்டையினை சாப்பிடுவதும் கோழியை உண்பதற்கு சமம். தான். அதனால் முட்டை அசைவமே.
முட்டை உண்பதும் ஜீவ காருண்யத்திற்கு விரோதமானது தான் .
4. சைவ உணவு அல்லாது சில சித்தர்கள் அசைவ உணவு உண்டதாக சொல்வது உண்மையா?
இறைவனை உணர்ந்த எந்த ஞானியும் , சித்தரும் அசைவம் உண்ண வில்லை. பரிபாசையாக கூறி உள்ள விசயங்களை சரியாக தெரிந்து கொள்ளாததனால் தான் இவ்வாறு தவறான கருத்துக்கள் தோன்றி உள்ளது .
அசைவம் உண்பவன் ஞானி அல்ல. கீழ் கண்ட வள்ளலாரின் பாடல் இதற்கு சான்று :
”மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்துவயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும்
கருவாணை யற இரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்தனேல்
எங் குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே”
2-ம் திருமுறை -திருவருட்பா
ஒருவன் ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் ,இறந்தவரை எழுப்பவும் வல்லவனாயினும் அவன் புலால் உண்ணும் கருத்துடையவனாயின் அவன் ஞானியல்ல !? புலால் உண்பவனல்ல அந்த கருத்துடையவானாயினும் அவன்ஞானியல்ல கேவலம் மனித மிருகமே!? இது என் குரு மீது ஆணை சிவத்தின் மீதும் ஆணை என்று அறுதியிட்டு கூறுகிறார் வள்ளலார்!
மேலும்
‘உயிர்கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர், அவர் புறிவினத்தார்!” என்று இறைவனே தனக்கு அருளியாதாக இயம்புகிறார்.
5. சைவ உணவின் மூலம் எல்லா சக்திகளையும் பெற முடியுமா?
சைவ உணவின் மூலம் எல்லா சக்திகளையும் பெற முடியும். மரணமில்லா பெருவாழ்வு பெற்ற எல்லா ஞானிகளும் இதற்கு சாட்சி.
உலகியலிலும் யானையின் பலமும் , குதிரையின் வேகமும் சைவ உணவின் மூலமே வருகிறது.
மேலும் சைவ உணவு உட்கொண்டு சாதித்தவர்கள் எல்லா துறையிலும் உள்ளார்கள்.
நாம் சிந்திக்க வேண்டியது இது தான் “எல்லாம் அறிந்த – பிறப்பு இறப்பை வென்று இறை நிலை அடைந்த ஞானிகள் சொல்லை நாம் கேட்க வேண்டுமா , அல்லது பிறந்து இறக்கும் அறிவில்லா மனிதர்களின் சொல்லை கேட்க வேண்டுமா என்பது தான்”
6. சைவ உணவு உட்கொண்டால் தான் இறைவனை அடைய முடியும் என்றால் பின் எப்படி “கண்ணப்பநாயனார்“ முக்தி பெற்றார்?
கண்ணப்ப நாயனார் இறை பக்தியில் தனது கண்ணை கொய்து இறைவனுக்கு அற்பனித்தார். அவர் செய்த தீய வினைகள் அப்போது தான் நீங்கியது. அதன் பின்னரே அவருக்கு இறை காட்சி கிட்டியது.
கண்ணப்ப நாயனார் அசைவம் உண்டு இறைவனை அடைந்தார் என்று சொல்பவர்கள் கடைசியாக நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டியது ஒன்றுதான். அவரை சிவலிங்கம் ஈர்த்தவுடன் அவர் தனது தூக்கத்தை தொலைத்தார், வேட தலைவன் என்பதை மறந்தார், தன் நாக்கின் சுவையை தனக்கு பயன்படுத்தாமல் இறைவனுக்கு படைக்க போகும் உணவு ருசியாக இருக்கிறதா என்பதை சோதிக்க மாற்றி கொண்டார். தன் வேட்டை தொழிலையே சிவலிங்கத்திற்க்கு உணவு படைப்பதற்க்காக மாற்றி கொண்டார்.
இறைவனுக்காக இவ்வளவு விடயம் மாற்றி கொண்டவரை போய் வெறுமனே அசைவ உணவை கூட மறுக்க இயலாதவர்கள் தங்களுக்கு உதாரணமாக சொல்லி கொள்வதை விட மிக பெரிய அறியாமை இருக்க முடியாது!
ஒரு கண்ணை தோண்டி எடுத்தவுடன்… மறு கண்ணையும் தோண்டி எடுக்க வேண்டிய நிலை வரும் போது ஒரு சின்ன சலனம் கூட இல்லாமல் தனது மறு கண்ணை தோண்ட துணிந்த கண்ணப்ப நாயனாரை சிறு குரு காணிக்கை குடுத்து இறைவனை அடைய என்னும் நம்மை போன்ற சாதாரன பாமரர்களுடன் ஒப்பிட்டு சொல்லும் ஆசிரம நிறவனங்கள் மற்றும் யோக நிறுவனங்களின் ஞான நிலை எந்த அளவில் இருக்கிறது என்று நினைக்கும் போதே புல்லரிக்கிறது.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையினை முழுவதாக படியுங்கள் மேலும் இதற்கு விடை தெளிவாக தெரியும்.