திருவடி தீட்சை

தீட்சை = தீ + அட்சை. அட்சம் என்றால் கண். அதாவது கண்களில் உள்ள தீயை (ஒளியை) ஞான சற்குரு தன் கண்களின் ஒளியினால் தூண்டுவதே தீட்சை.

தீட்சையின் மூலம் தன் கண்ணில் – கண் மணியில் உணர்வு பெறுகிறான் சீடன்.

ஒரு ஞான சற்குரு தன் கண் ஒளியால் சீடனது கண் ஒளியை துண்டிய பின் தான் , சீடன் தனது கண் ஒளியை பற்றி கண் ஒளி பெருக்க தவம் செய்ய முடியும். (தங்க ஜோதி ஞான சபையின் ஒன்பது குருமார்கள்)

திருமூலர் தனது திருமந்திரத்தில் இதனை அழகாக குறிபிடுகிறார்:

 “விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் மாம”             
திருமந்திர பாடல் – 2816

விளக்கினை பிளந்து விளக்கினை ஏற்றி – இங்கு திருமூலர் நமது உடலில் விளக்கான கண்ணை பிளந்து ஏற்ற பட வேண்டும் என்கிறார். ஏன் பிளக்க வேண்டும்? எதனால் பிளக்க வேண்டும்?

நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சுட்சமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது.

தீட்சையின் போது சீடனின் இவ்வினை திரையை சற்குரு தன் கண் ஒளியால் பிளந்து சீடனின் கண் ஆகிய விளக்கினை ஏற்றி வைக்கிறார்.

தீட்சையின் போது முதலில் நம் புற கண்ணை திறந்து குருவின் கண்ணை பார்க்க வேண்டும். தீட்சை பெற்ற பின் கண்ணை திறந்து தான் தவம் செய்ய வேண்டும். கண் திறந்து கண்மணி உணர்வை பற்றி தவம் செய்தால் தான் கண் ஒளி பெருகும்.

நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நம் ஜீவ ஒளியும் , புற ஒளியும் ஒன்றல்ல. நம் ஜீவ ஒளியை தகுதி பெற்ற சற்குருவின் ஜீவ ஒளியை கொண்டு தான் தூண்ட முடியும். வேறு எந்த புற ஒளியை கொண்டோ வேறு எதனாலோ தூண்ட முடியாது.

இதுவே தீட்சை. தீட்சையின் மூலம் வள்ளல் பெருமான் நம்முள் வந்து , நம் உடனிருந்து வழி நடத்தி , தவம் செய்ய துணை புரிந்து நம்மை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்.

நம் கண்மணியை கிருஷ்ண மணி என்பர். தகுந்த ஞான சற்குருவின் மூலம் நம் கிருஷ்ண மணியில் உணர்வு பெறுவதே கிருஷ்ண உணர்வு. இந்த உணர்வை பெறுவதே தீட்சை. இதை தான் சித்தர்கள் “தொடாமல் தொடுவது” , “உணர்வால் உணர வைப்பது” என்றனர்.

சச்சு தீட்சை, நயன தீட்சை, தச தீட்சை என்று கூறுவது திருவடி தீட்சையான இதை தான். ஒரு ஞானியால் குருபீடத்தில் அமர்த்த பட ஒருவர் தான் இந்த தீட்சையினை வழங்க முடியும்.

தச தீட்சை என்றால் 10விதமான தீட்சை அல்ல. நம் உடலில் 8ம்(வலது கண் ஒளி ) , 2ம் (இடது கண் ஒளி) உள் சேர்த்தல் நம் உயிர் ஸ்தானமான அக்னி கலையை அடடையலாம்.  10ம் இடமான நம் இரு கண் உள் சேரும் இடத்தில்   தான் நம் உயிர் உள்ளது. இங்குள்ள உயிர் ஒளியை பெருக்கி தன் இரு கண்கள் மூலம் சீடனின் கண்ணை பார்த்து சீடனின் கண்களில் உள்ள ஒளியை குரு தூண்டுவதான் தீட்சை. இதை தான் தச தீட்சை என்றனர். கண்களான நாயனத்தின் மூலம் கொடுப்பதால் நயன தீட்சை என்றும் , திருவடி தீட்சை என்றும் பெயர்.

நம் கண்மணி மத்தியில் ஊசி முனை அளவு துவாரம் உள்ளது. நம் உயிரை பற்றி உள்ள மும்மலங்கலான (ஆணவம், கன்மம், மாயை)   வினை திரைகள் கண்ணாடி போல் அமைந்து நம் உள் ஒளியை மறைத்துள்ளது. 

நம் உயிர் ஒளி வலது கண்ணில் சூரிய ஒளியாகவும் , இடது  கண்ணில் சந்திர ஒளியாகவும் துலங்குகிறது. இந்த இரு கண் ஒளியையும் வினைகள் முடியுள்ளன. இந்த கண்களில் உள்ள சூரிய , சந்திர ஒளிகளை மறைத்துள்ள வினை திரையை நீக்குவதே தீட்சை.  இதன் பின் தான் நம் உயிர் ஒளியை நாம் நம் கண்களில் பற்ற முடியும்.  இந்த உயிர் ஒளியை நாம் பற்ற ஒளி உணர்வினை (ஜோதி உணர்வினை) குரு தன் உயிர் ஒளியினை கொண்டு தருவார். இந்த ஜோதி உணர்வினை கண்களில் பெறுவதே தீட்சை.

இந்த உணர்வினை நாம் பெருக்க,பெருக்க நம் உயிர் ஒளி பெருகி (ஞான கனல்) நம் வினை திரைகளை நீக்கும்.

ஞான சரியையில் வள்ளல் பெருமான் (நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து) என்று கூறியுள்ளது இதையே. இதுவே கனல் எழுப்பும் பயிற்சி.

இறைவன் திருவடியான நம் கண் ஒளியை பற்றி இருப்பதே “சும்மா இரு” என்பதன் அர்த்தம்.  இதுவே தவம்.

இறைவனை அடைந்த எல்லா சித்தர்களும் , ஞானிகளும் இவ்வாறே தீட்சை பெற்றனர். தங்கள் கண் ஒளியை பற்றியே தவம் செய்து தன்னை உணர்ந்து இறைவனை உணர்ந்தனர்.

நம் ஸ்துல உடலில் உள்ள சூட்சும சரிரம் தீட்சையின் மூலம் பிறக்கிறது. இதனால் தீட்சை கொடுத்த ஞான சற்குருவே தாய் தந்தை ஆகிறார்.

“அக்னியின் மூலம் ஞானஸ்தானம்” என்று பைபிள் இதையே கூறிப்பிடுகிறது. இயேசு நாதர் அக்னியால் வழங்கியே ஞானஸ்தானம் இதுவே.

தீட்சை பெற்றவனே துவிசன் ஆகிறான். துவிசன் என்றால் மறுபடி பிறந்தவன் என்று பொருள். இதையே பைபிள் “மறுபடி பிறவாதவன் பரலோக சம்ராட்சியத்தில் பிரவேசிக்க மாட்டான் ” என்றும் , அகத்திய மகரிஷி “மாற்றி பிறக்க வகையறிந்தாயில்லை” என்று கூறுவதும் இதையே.

மாதா பிதாவினால் பிறந்த மனிதன் குருவால் துவிஜனாகி தவம் செய்து முடிவில் இறைவனை அடைகிறான்.

தீட்சை பெற வேண்டிய தகுதிகள்:

1. சைவ உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும். (முட்டையும் அசைவ உணவே)
2. போதை , புகை போன்ற பழக்கங்கள் அறவே விட்டு நீங்க வேண்டும்.
3. ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.(தீய (அ) முறையற்ற  செயல்களில் ஈடுபடவே கூடாது.)
4. சிறு தெய்வ வழிபாடு செய்தல் கூடாது.
5. பலி கொடுப்பதோ (அ) பலி கொடுக்கப்படும் ஆலயங்கள் செல்லுதல்கூடாது.
6. தீட்சை எல்லா மனிதர்களும் பெறலாம்.

சுருங்க கூற வேண்டுமானால் பஞ்ச மா பாதகங்கள் செய்யாதவராக இருத்தல் வேண்டும்.

இப்பழக்கங்கள் இருப்பின் உடனடியாக இவைகளை கைவிட்டு , இனி இவைகளை
செய்வதில்லை என சங்கல்பம் செய்து கொண்டு பின் குருவை வணங்கி குரு
காணிக்கை கொடுத்து தீட்சை பெறலாம்.

முற்று பெற்ற ஒரு ஞானியால் மட்டுமே திருவடி தீட்சை வழங்க முடியும். 

எங்கள் குருநாதர் திரு. சிவ செல்வராஜ் அவர்கள் வள்ளல் பெருமான் அருளால் இந்த ஞானத்தை உபதேசித்தும் , தீக்ஷை கொடுத்ததும் தங்க ஜோதி ஞான சபை கன்னியாகுமரியில் நடத்தியும் வருகிறார்.

மஹா-சமாதி ஆகும்முன் ஞான பணி தொடர ஒன்பதுசீடர்களுக்கு குரு பீடம் கொடுத்து உள்ளார்கள். கன்னியாகுமரியில் மட்டும் திருவடி உபதேசம் தீட்சை கொடுக்கப்பட்டு வந்தது,குருவின் அருளால் மேலும் ஒன்பது இடங்களில் கொடுக்கப் படுகிறது.

குருபீடத்தில் அமர்ந்துள்ள ஒன்பது குருமார்களின் மூலம் வள்ளல் பெருமான் தான் தீட்சை வழங்குகிறார். பாமர மக்கள் நேரடியாக வள்ளல்பெருமானை பார்க்கும் ஆன்ம பலம் இல்லாததால் ஸ்துல தேகத்தில் உள்ள குருமார்களின் மூலம் வள்ளல் பெருமான்  தீட்சை வழங்குகிறார். 

Share

Leave a comment