ஹரியும் , சிவனும் ஒன்று – உணர்த்தும் ஞானிகள்

இன்று சைவம் தான் பெரியது , வைணவம் தான் பெரியது என்று சிலர் சண்டையிட்டு கொள்கின்றனர். ஆனால் நமது ஞானியர் ஏகமான இறைவனே ஒரு நிலையில் சிவனாகவும் , விஷ்ணுவாகவும் இருக்கிறார் என்று தெளிவு படுத்துகின்றனர். ஞானியர்  கூறியுள்ள பாடல்களிலும் ஏற்படுத்திய கோயில்களிலும் அவர்கள் உணர்த்தும் இவ்வுண்மையை இக்கட்டுரையில் நாம் பாப்போம். இவைகள் அனைத்தும் எங்கள் குருநாதர் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டது.

கீழுள்ள ஞானிகள் பாடல்களை பாருங்கள்.

“வைகுந்த னென்பதோர் தோணி பெறாது ஊழல் கின்றேன்” – நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஸ்ரீஆண்டாள் பாடல் 548

“கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்ததோர் கலம் இது” – திருஞானசம்பந்தர் தேவார பாடல் 5

“தோணி போல காணுமடா அந்த வீடு” – சித்தர் பாடல்

“அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி” – திருமந்திரம் பாடல் 1554

வைகுந்தம் என்பதோர் தோணி. வைகுந்தம் கைலாயம் என்பது எல்லாம் தோணியே. சம்பந்தமே இல்லாமல் இருக்கிறதா? சம்பந்தப்படுத்தி பார்ப்பதே புத்திசாலித்தனம். யூகித்து சிந்தித்து பொருள் காண்பதே அறிவுள்ளவன் செயல். ஒரு ஞானி பாடலை படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்றால் , மற்றொரு ஞானி பாடலே உதவியாகும். ஒரு சித்தன் சொன்ன பரிபாஷை விளக்கம் இன்னொரு சித்தர் பாடலிலே வரும். ஏன்னெனில் எல்லா சித்தரும் எல்லாம் வல்ல ஒரே இறைவனைப் பற்றியே கூறுகின்றனர். இறைவன் இருக்கும் இடத்தை பற்றி விட்டதனால் தான் அவர்களால் கூற முடிந்தது.

“தோணி போல காணுமடா அந்த வீடு” என பாடுகிறார் ஒரு சித்தர். நம் உடலில் இறைவன் இருக்கும் இடம் தோணி போல இருக்கிறதாம்.எப்படி? நமது கண்கள் தானே தோணி போல இருக்கிறது. இப்போது பாருங்கள் வைகுந்தம் என்பதோர் தோணி! கண்ணே! வைஷ்ணவர்கள் வைகுந்தமென்பர். சைவர்கள் கைலாயம் என்பர். இரண்டுமே கண்ணையே குறிக்கும். கண்ணின் மணியில் ஒளியாகத்தானே கண்ணன் – சிவம் இருக்கிறது. வைகுந்ததில் கண்ணன் , கைலாயத்தில் சிவம் ஆக கண்ணில் தான் சிவனும் விஷ்ணுவும்.

அரியும் சிவனும் ஒண்ணு என அறியாதவன் வாயிலே மண். வாயிலே மண் செத்த போது தானே. செத்துப் போவான். ஒரே கடவுள் வெவ்வேறு வடிவத்தில் பெயரில் விளங்குகிறார் என அறிந்தவர்களே ஞானிகள்.

தோணி என்பது கண்ணையே குறிக்கும். பரிபாஷை. சீர்காழி ஊரிலே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானின் திருநாமம் தோணியப்பர். தோணியிலே இருக்கும் அப்பன். கண்ணிலே மணி ஒளியான கடவுள்.

தோணியிலே ஏறி – கண்ணில் ஏறி மணி ஒளியை அடைந்தாலே, பிறவியாகிய பெரிய கடலை தாண்டி போவது என்றனர் ஞானியர். அந்த முயற்சியிலே ஊனுருகி , எலும்பும் உருகுமே. கண்கள் தூக்கமின்மை போன்ற உடல் துன்பங்களும் தாண்டி தான் நம் கண்மணியை வைகுந்தநாதனை அடைய முடியும்.

தோணி என்பது நம் கண்ணை தான் குறிக்குமா?

“கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்ததோர் கலம் இது” – திருஞானசம்பந்தர் தேவார பாடல் 5

நமது கண் அமைப்பை நன்றாக பாருங்கள். வெள்ளை விழி – அதன் நடுவே கருவிழி – இந்த கருவிழியை தான் கருமை பெற்ற கடல் என்கிறார் திருஞான சம்பந்தர், வெள்ளை விழி தான் திருப்பாற்கடல் என்றார்கள் ஆழ்வார்கள். இந்த கருவிழியாகிய கருங்கடலிலே மிதக்கின்ற கலம் தான் நம் கண்மணி. எவ்வளவு ஒப்பற்ற உவமை இது. நம் கண்மணி வேறு எதையும் பற்றாமல் கருவிழியில் பிராணநீரில் மிதந்து கொண்டிருக்கிறது. இது தான் ஞான இரகசியம். தாயின் கருவினுள் சிசு பனிக்குடத்தில் இருப்பது போலவே கண்மணியும் “நீர் மேல் நெருப்பாக” மிதந்து கொண்டிருக்கிறது. கண்மணியின் மையம் ஊசிமுனை துவாரம் உள்ளது. அதனுள் ஊசிமுனை அளவு நெருப்பு. என்னே இறைவனின் படைப்பின் அற்புதம். யாரறிவார் இந்த ஞான இரகசியத்தை. சீர்காழியில் 3 வயது திருஞான சம்பந்தரை ஆட்கொண்டு அருளிய இறைவனின் திருநாமம் தோணியப்பர். கலம் – தோனி. கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்ததோர் கலம் – தோனி நம் கண்மணி , அதன் நடுவிலே இறைவன். தோணியாகிய கண்மணியிலே அம்மையப்பன் – அப்பன் – தோணியப்பர். உன் கண்மணியே – தோணியப்பர். காழிப்பிள்ளை உரைத்த ஞானம் இது.

“அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி” – திருமந்திரம் பாடல் 1554

நம் கண்ணே தோணி என்கிறார். தோணி போல் காணுமடா அந்த வீடு என்கிறார் ஒரு சித்தர். திருமூலரும் அந்த வீடு கண்ணாகிய வீட்டை தோணி என்றே பரிபாசையாக கூறுகிறார். குருதீட்சை பெற்று தெளிந்து அறிவாக கண்மணி ஒளியில் நிலைத்து தவம் செய்பவரே பெறுவர் ஞானம். தோணியிலே – கண்ணிலே ஏற்றும் கனல் உள்ளே ஆத்மஸ்தானத்தால் ஈர்க்கப்படும். அறிவு துலங்கும். ஆத்மஸ்தானம் அழைத்ததாக கூறுவது இந்நிலையையே. இப்போது தோணியில் வேண்டாத குப்பைகள் பெரும்பாரமாக இருக்கின்றது. தோணி அக்கரையை அடைய வேண்டாத மும்மலக் குப்பை பாரத்தை கடலில் தூக்கி வீச வேண்டும். பாரம் இல்லையெனில் தோனியை விரைந்து ஒட்டி அக்கரையை அடையலாம். அக்கரை சேர மிகுந்த அக்கரை வேண்டும். அக்கரையில் அல்லவா இருக்கிறது ஆனந்தம் தரும் அமுதம். “இக்கரை கடந்திடில் அக்கரையே இருப்பது சிதம்பர சர்க்கரையே. என வள்ளலார் பாடி மகிழ்கிறார். தோணியில் ஏறி தான் போக முடியும். கண்ணே தோணி.

ஞானிகள் அமைத்த கோயில்களில் ஹரி சிவ ஒற்றுமை:

மூர்த்தி தலம் தீர்த்தம் மூன்றிலும் சிறந்தது நம் தமிழ் நாட்டின் பல கோயில்கள். புண்ணியம் செய்தவர்கள் நாம் தான்.

பொதுவாக எல்லா கோயில்களிலும் சுவாமி கிழக்கே பார்த்தே இருக்கும். ஆனால் ஸ்ரீரங்கத்தில் ஆனந்தமாக அனந்த சயனம் கொண்டு தெற்கு பார்த்து கொண்டிருக்கிறார். சிதம்பரத்திலே ஆனந்தமாக தெற்கு பார்த்து நடனமாடிக் கொண்டிருக்கிறார். கண்ணன் படுத்திருப்பதும் கண்ணிலே. நடராஜர் நடனமாடுவதும் கண்ணிலே.

சிவாலயத்தில் தீயில் வெந்த நீரும் விஷ்ணுவாலயத்தில் குளிர்ந்த நீர் தீர்த்த துளசியும் பிரசாதமாக தருகிறார்கள். எல்லாமே காரண காரியத்தோடு தான் நம் முன்னோர்கள் செய்த்திருக்கிறார்கள். சிவனுக்கு வில்வம் சூடு. விஷ்ணுவுக்கு துளசி குளிர்ச்சி. நம் உடம்பில் பாதிக்கு மேல் நீர் அம்சம். உடலை இயக்கம் சக்தியாகிய உயிரோ சிவமோ நெருப்பம்சம். எப்படி?! சிதம்பரத்தில் பக்கத்து பக்கத்து சன்னதிகளிலே நடராஜரும் விஷ்ணுவும் காட்சி தருகிறார்கள். சங்கரன்கோயில் எனும் ஊரிலே சிவன் பாதி விஷ்ணு பாதியாக அர்த்த நாரீஸ்வரர் போல கட்சி – சங்கர நாராயணராக காட்சி தருகிறார்கள். சிவ விஷ்ணு ஐக்கியமே மனிதன். புரிந்தால் சிவம் புரியாவிட்டால் சவமே.

இறைவன் நம் கண்ணிலே நீர்மேல் நெருப்பாக விளங்குகிறான். நீர் அம்சம் விஷ்ணு. நெருப்பு அம்சம் சிவன். நம் கண்ணிலே சிவமும் விஷ்ணுவும் சேர்ந்தே இருக்கிறது. புரியாதவர்கள் அறியாதவர்கள் வாயில் மண்ணு தான். நீரும் தீயும் சேர்ந்தால் தானே ஆக்கம். சேராமல் சேரனும் அது தான் ஞானம். அடுப்பிலே தீ மேலே பானை நீர். தீயும் நீரும் நேரடியாக தொடவில்லை!? இது தான் ஞானம். தொடாமல் தொடுவது? நினையாமல் நினைப்பது? சொல்லாமல் சொல்லி விட்டேன். சொல்லக் கூடாது என மறைத்தவற்றை , எல்லாத்தையும் சொல்லிவிட்டேன். சிவம் செம்பொன்மேனி. விஷ்ணு பச்சை. அம்பாளும் பச்சை. ஒரு நிலையில் விஷ்ணு தான் அம்பாள்.

இங்கு கன்னியாகுமரி மாவட்ட பெருமையை சொல்லித்தான் ஆக வேண்டும். கன்னி ‘ய’ குமரியில் மகா சிவராத்திரியன்று பக்தர்கள் 12 சிவன் கோயில்களுக்கு ஓடி ஓடியே போவர். திருமலை , திக்குறிச்சி, திற்ப்பரப்பு , திருநந்திக்கரை, பொன்மனை, திருப்பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிதாங்கோடு, திருவிடைக்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் என 12 சிவன்கோயில்களுக்கும் விரதமிருந்து ஓடுவர். சும்மா இல்லை. கோவிந்தா , கோபால என்று கூறிக்கொண்டே ஓடுவர். இதுதான் ஆச்சர்யம். போவது சிவன் கோயிலுக்கு உச்சரிக்கும் நாமமோ விஷ்ணுவுடையது. கோபாலா கோவிந்தா என்று. 12-வது கோவில் சிவன் விஷ்ணுகோயில். சிவன் பாதி விஷ்ணு பாதி உருவத்தில் காட்சி தருகிறார்கள்.

சிவன்கோவிலுக்கு ஓடும் பக்தர்கள் விஷ்ணு மந்திரம் சொல்லி முடிவில் இருவரும் ஒரே கடவுளே! என உணர்த்துவதே இந்த சிவாலய ஓட்டத்தின் நோக்கம். அரியும், சிவனும் ஒன்று தான் என நம் முன்னோர்கள் கரடியாக கத்துகிறார்கள். இன்னும் புரியாத முட்டாள்களை நினைத்து வருத்தப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை. சொல்வதற்கில்லை.

அஷ்டாட்சரமும் , பஞ்சாட்சரமும் ஒரே இடத்தில தான் உள்ளது என அறிந்தால் கிட்டும் மோட்சம். கிட்டும் ஞானம்.

ஓம் நமோ நாராயணாய! ஓம் நம சிவாய!

Share

3 Comments

  • prithivi
    Posted September 4, 2016 5:10 am 0Likes

    Aadhiyae thunai

  • T.saravanan
    Posted February 1, 2017 5:46 pm 0Likes

    நன்றாக உள்ளது மேலும் படிக்கனும்னு நினைக்கிறேன்

  • கிருவை
    Posted December 25, 2018 7:20 am 0Likes

    கலம் என்பதை காலம் என சம்பந்தர் பாடலில் எல்லாரும் பதிகின்றனர்.
    இக் கட்டுரையில்தான் சரியான பதிவு. நன்றி.

Leave a comment