ஜீவகாருண்யம் – உன் ஜீவனை கருணையோடு பார்!

ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு சிவ செல்வராஜ்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்!
தங்க ஜோதி ஞானசபை அறக்கட்டளை!
கன்னியாகுமரி – 629702

தங்க ஜோதி ஞான சபை வெளியீடு : 38
நூல்: ஜீவ காருண்யம்
உரிமை: S.S. சுயம்ஜோதி
முதல் பதிப்பு. : 15-10-2012 புரட்டாசி மாதம் சித்திரை நட்சத்திரம் வள்ளலாரின் 190-வது குருபூஜை 5000 பிரதிகள்
முதல் 24 பதிப்புகள் : 1,30,000 பிரதிகள்
25-வது பதிப்பு ஞானதானம் : காஞ்சிபுரம் அன்பர்கள்
ISBN No. : 978-81-941068-1-4
மனிதனாக வாழ! நல்வாழ்வு வாழ!
புகை பிடிக்காதே – புற்றுநோய் வரும்!
மது அருந்தாதே – மதி மயங்குவாய்!
மாமிசம் சாப்பிடாதே – மிருகமாவாய்!
பஞ்ச மாபாதகங்கள் புரியாதே – பண்புடன் வாழு!
ஜாதி, மத, இன, மொழி பாராதே – சமரசங் காண்!|
மனிதனாய் நாம் பிறந்தது – வாழ்வாங்கு வாழவே!
நாம் பெற வேண்டியது – மரணமிலாபெருவாழ்வு!
ஞானம் பெற நமக்கு தேவை – ஞானசற்குரு!
ஆன்ம நேய ஒருமைப்பாடே – ஜீவகாருண்யம்!

நம் இருகண்களே – இறைவன் திருவடி!

இலவச வெளியீடு : தங்கஜோதி ஞானசபையில் நன்கொடை ஏதும் வசூலிக்கப்படுவதில்லை

சாப்பாடு போடுவது மட்டுமல்ல? ஜீவ காருண்யம் உன் ஜீவனை கருணையோடு பார்!

போதும் போதும் என ஒரு மனிதன் சொல்வது சாப்பாட்டை மட்டுமே! எல்லா மனிதனையும் திருப்தி செய்வது சாப்பாடு மட்டுமே! பசி என்று வந்து விட்டால், வேறொன்றும் ஓடாது?

ஆகாரம் வேண்டும். அதுமட்டுமே வேண்டும். வேறு எதுவும் அப்போது வேண்டாம்! “பசி வந்திட பத்தும் பறந்து போகும்” என்றார் ஔவையார்! பசி வந்தால் நம் உடல் சோர்ந்து போகும். உள்ளம் சோர்ந்து போகும். நம் உயிர் நிலைக்க ஆகாரம் கண்டிப்பாக தேவை. பிறந்த உடன் தாய்ப்பால்! ஞானம் பிறக்க வாலை தரும் அமுதம் மிகவும் தேவை!

ஜீவ காருண்யம்

கொசு முதல் யானை வரை, தாவரங்களுக்கும், மனிதர்களுக்கும் உணவில்லையேல் உயிரில்லை! உயிர் நிலைக்க உலகத்தாய் வாலை தரும் பாலமுதமும் கண்டிப்பாக வேண்டும்! உடல் நன்றாய் இருந்தால் தான், நல்ல ஒழுக்க நெறியோடு நாம் வாழ்ந்தால் தான், நல்ல ஒழுக்க நெறியோடு நாம் வாழ்ந்தால் தான், சைவ உணவு உட்கொண்டு வாழ்ந்தால் தான், காய்கறிகளும் பழங்களும் கீரை வகைகள் தானிய வகைகள் உட்கொண்டு வாழ்ந்தால் தான், பண்போடு பணிவோடு வாழ்ந்தால் தான், மாதா பிதாவை பெற்ற நாம் ஞான சற்குருவை பெற்று உபதேசம் தீட்சை பெற்று ஞான தவமும் ஞான தானமும் செய்தால்தான் சாகாமல் என்றும் வாழலாம்! வாழ்வாங்கு வாழலாம்!

“உண்டு வழந்தான்” என யாரும் நம்மை கிண்டல் கேலி செய்யாமல் வாழ வேண்டுமே! தின்று தின்று உடல் கொழுப்பதால் ஏதேனும் பயனுண்டா? நோய் தான் மிச்சம்! நல்ல ஆகாரம் வேண்டும்! தேவைக்கு அதிகமாக சாப்பிட்டால் வியாதிதான்! “அருந்தியது அற்றது போற்றி உணின்” என்பதே ஆன்றோர் வாக்கு! நாம் சாப்பிட்ட ஆகாரம் ஜீரணித்த பின்னரே அடுத்து சாப்பிட வேணும்! எப்போது சாப்பிட வேணும், எதை சாப்பிடணும் என்றும் நம் முன்னோர்கள் பட்டியலிட்டு நமக்காக வழங்கியிருக்கிறார்கள்! நம் ஞானிகள்! ஒழுங்காக சரியாக சாப்பிடக்கூட நமக்கு தெரியவில்லை!? சரியான சாப்பாட்டு ராமன்கள் தாம் நாம்!

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் தேவையில்லை! சிறந்த குழந்தையாக வளர, காய்கறிகள் பழங்கள், அரிசி கோதுமை நவதானியங்கள் போதும்! உடலைக் கெடுக்கும் அறிவை மயக்கும் புலால் உணவான மீன்முட்டை ஆடு மாடு கோழி இறைச்சி முதலியவை சாப்பிடவே கூடாது! புகையிலை பொருட்களை உபயோகிக்கவே கூடாது! நாம் மனிதர்கள் சிந்திக்கத்தெரிந்தவர்கள்! நம் சிந்தனை ஓங்கி வளர வேண்டும்! அறிவு பூரணமாக விளங்க வேண்டும். அதற்கு முதல் எதிரி கெட்ட பழக்கமும் மாமிச உணவும் மதுவுமே! அறியாமையால் சிலர் நல்ல சத்து என்று சாப்பிடுகிறார்கள்! தவறு! அறிவு துலங்க சைவ உணவே சிறந்தது. சைவ உணவே சன்மார்க்க உணவு!

எல்லா உயிரினங்களும் இறைவன் படைப்புதானே! ஒரு உயிரை மற்றொரு உயிர் கொல்லலாமா? பாவமில்லையா? எல்லா உயிரையும் உன் உயிர் போல் நேசி என்றார்களே ஞானிகள்? பிற உயிரை கொல்ல, துன்புறுத்த உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

மாமிசத்தை “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”. நீ இன்று பிற உயிரை- சாப்பிட்டாயானால், நாளை என்றாவது ஒருநாள் நீயும் கொல்லப்படுவாய் இது சத்தியம்! உன்னால் துன்பப்பட்ட உயிர் பட்ட வேதனையைப் போல் நீயும் துன்பத்துக்கு ஆளாவாய் இது உறுதி! எனவே பாவம் செய்யாமலிரு! ஒரு மகான், சிறுவயதில் ஒரு கிளியை கூண்டிலடைத்து வைத்து மகிழ்ந்தாராம். பெரியவரான பின் செய்யாத குற்றத்திற்கு மன்னன் 14 வருடம் ஜெயிலில் அடைத்தானாம்! அறியாமல் சிறுவயதில் செய்த பாவம் பின்னாளில் அவருக்கு ஜெயில் வாசம் கொடுத்தது. யாராயினும் சரி தண்டனை உண்டு! திருவருட் பிரகாசவள்ளலார் இராமலிங்க சுவாமிகள் மனுமுறை கண்ட வாசகத்தில், “பட்சியை கூண்டில் பதைக்க அடைத்தேனோ”? எனக் கூறுவது இம்மகான் வாழ்வைப் பற்றித்தானோ?!

உயிர்க்கொலையும் புலை புசிப்பும் உடையாரெல்லாம் புறவினத்தாரே என வள்ளலார் மக்களை பிரித்தே வைத்து விட்டார்! சுத்த சைவ உணவு உட்கொண்டு வாழ்பவராய், எம்மதமும் சம்மதமே என்ற சமரச சன்மார்க்க ஒழுக்க சீலராய் வாழ்பவரே அகவினத்தார் என்று கூறுகிறார்! இறைவன் அருள்வேண்டின், தூய நல்ல பண்போடு நெறியோடு சத்திய சீலராய் வாழுங்கள்! எவ்வுயிரும் உன் உயிரைப்போல என்பதை உணர்வாயாக! உலக உயிர்கள் அனைத்தும் இறைவன் படைப்பென்றால், உன்னையும் படைத்த அந்த இறைவன் எல்லா உயிரையும் அன்பாக நேசிக்கவல்லவா அறிவுறுத்துகிறார்!! எல்லா ஞானியும் அன்பைத்தானே போதித்தார்கள்!

பஞ்ச மாபாதகங்கள் பொய் கொலைகள் காமம் களவு புரிபவர் பாழ் நரகலோகம் சேர்வது உறுதி! பூமியிலும் நோய் நொடி பேரிழப்பு ஏற்பட்டு சொல்லொணா துன்பத்தில் துடிப்பர்!? பிறருக்கு சாப்பாடு கொடுப்பது மட்டுமல்ல ஜீவ காருண்யம்! முதியோர்களை ஆதரித்தல், அனாதைகளை பரிவோடு சகாயித்தல், படிக்க வசதியில்லாத ஏழைகளுக்கு படிக்க உதவுதல், ஆடைகள் தானமாக வழங்கல், உணவுப்பொருட்களை தானமாக வழங்குதல் இப்படி எவ்வளவோ வழிகளில் உதவலாமே! எல்லாமே ஜீவகாருண்யம்தான்!

அதுமட்டுமா, யார் யாருக்கு எந்த சமயத்தில் எந்த உதவி தேவையோ அவையனைத்தும், தக்க சமயத்தில் செய்யும் உதவி, சேவையும் ஜீவகாருண்ய ஒழுக்கமே! இக்கட்டான நேரத்தில் கைகொடுத்து காப்பது மிகச் சிறந்த ஜீவகாருண்யம்! ஏனைய துன்பப்படும் ஜீவர்களுக்கு எந்த விதத்திலாவது செய்யும் உதவியும் ஜீவகாருண்யமே! சென்னையில் ஒரு அன்பர், அரசு மருத்துவமனையில் கிடக்கும் அனாதை பிணங்களை முறையாக பெற்று நல்லடக்கம் செய்வதையே பணியாக கொண்டு தொண்டாற்றுகிறார்! இதுவும் ஜீவகாருண்யமே! செத்த பிணத்தின் மீதும் பரிவு காட்டி ஜீவன் தங்கியிருந்த உடலுக்கு உரிய மரியாதை செய்து நல்லடக்கம் செய்வதும் ஜீவகாருண்யம் தானே!? கோவையிலும் அன்பர்கள் இப்பணி செய்வதாக அறிந்தேன். நெகிழ்ந்தேன்! இறைவா! அருள்புரி! காத்தருள்!

மதுரை மற்றும் பல ஊர்களிலும் பல அன்பர்கள் சாப்பாடு பொட்டலம் போட்டு தெருத் தெருவாக நடி பித்தம் பிடித்தவர்கள் சித்தம் தலைக்கேறியவர்களை கண்டு சாப்பாடு கொடுக்கிறார்கள்! சித்தகும் பித்தராய் திரிவதுண்டு! தெருவில் திரியும் உடல் ஊனமுற்றவர்கள் ஆதரிக்க ஆளில்லாததால் பிச்சைக்காரர்களாகி விட்டவர்களையும் தேடி உணவு கொடுப்பவர் உண்மையிலேயே புண்ணிய சாலிகள் தான்! இது தான், பசித்தவருக்கு கொடுக்கும் சாப்பாடுதான் உண்மையான அன்னதானம்! ஜீவகாருண்யம்! சாப்பிட வசதியுள்ளவர்களை கூப்பிட்டு சாப்பாடு கொடுப்பது, வீண் ஜம்பத்துக்கு விருந்து வைப்பது போலி கௌரவம் விரும்பும் புல்லர்களே! பசித்தபின்பு புசி! கோடீஸ்வரனுக்கும் பிச்சைக்காரனுக்கும் பசி ஒன்றே! யாருக்கும் சாப்பாடு கொடுக்கலாம்! தவறில்லை! பசித்தோர் பசி நீக்குதலே ஜீவகாருண்யம்!

மனிதர்களுக்கு மட்டும் தான் பசிக்குமா? பறவைகள் மிருகங்கள் தாவரங்கள் முதலிய எல்லா ஜீவராசிக்கும் படியளக்கிறான் இறைவன்! நாமேன் ஆகாரம் கொடுக்க வேண்டும் என கருதாதே! உன்னால் முடிந்ததை செய்! உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உன்னால் உணவு கொடுக்க முடியுமா? நீ பார்க்கும், உன்னருகில் ருக்கும் யாருக்காவது, வேறு எந்த உயிருக்காவது தாவரத்திற்காவது முடிந்தவரை நீ உணவு கொடு! முடிந்தால் செய்! பாரதியார் வறுமையில் வாடிய போது சமைக்க வைத்திருந்த அரிசியை குருவிகளுக்கு போட்டு அது சாப்பிடும் அழகை கண்டு மகிழ்ந்தாராம்!? இது வல்லவோ ஜீவ காருண்யம்! சிபிச் சக்கரவர்த்தி புறாவை காப்பாற்ற தன் தொடை சதையை அரிந்து கழுகுக்கு உணவாக கொடுத்தாரே இது வல்லவோ ஜீவ காருண்யத்தின் உச்சம்! இந்த கதையெல்லாம் தெரிந்து கொண்டு, ஜீவ காருண்யத்தின் – ஜீவனின் அருமை பெருமையை உணர்ந்து நாமும் ஜீவ காருண்ய ஒழுக்க நெறிப்படி வாழ வேண்டாமா?! சாப்பாடு போட்டால் மட்டும் ஜீவ காருண்யமல்ல! சேவை மனப்பான்மையுடன் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் பிற உயிர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி எதுவும் ஜீவ காருண்யமே!

உதவு! உன் கரங்கள் பிற உயிர்களுக்கு உதவும் கரங்களாகட்டும்! உன் வாய் இறைவனைப் பற்றி கூறி ஞானம் பெற உதவட்டும்! உன் மனம் வறியவர்களுக்கு எப்படியெப்படி உதவலாம் என சிந்தித்து செயல்படட்டும்! மக்கள் சேவையே மகேசன் சேவை என தொண்டாற்றுங்கள்!

ஜீவ காருண்ய ஒழுக்கம் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என வலியுறுத்துவே வள்ளலார் “ஜீவ காருண்ய ஒழுக்கம்” என்றொரு தனி நூலே இயற்றியுள்ளார். படியுங்கள்! முழுவதும் படியுங்கள்! ஆழ்ந்து படியுங்கள்! ஒவ்வொரு ஜீவர்கள் மீதும் நீங்கள் காட்ட வேண்டிய அன்பு எப்படியிருக்கணும் என்று தெளிவாக விரிவாக கூறியிருக்கிறார் வள்ளலார்! பிற ஜீவர்கள் மீது மட்டும் அன்பு காட்டினால்! கருணை காட்டினால் போதுமா?! உன் ஜீவனையும் கருணையோடு பார்!? என்கிறார் திருவருட்பிரகாசர்! கருணையோடு பார்!? என்கிறார் திருவருட்பிரகாசர்! சாப்பாடு போடுவதோ பிற பிற வகைகளில் பிற ஜீவர்களுக்கு சேவை செய்வது மட்டுமல்ல ஜீவகாருண்யம்!? உன் ஜீவனை, பிறந்து பிறந்து செத்து செத்து துன்பப்படும் உன் ஜீவனையும் கருணையோடு பார்!! உன் ஜீவன் நித்திய ஜீவனே! பிறப்பும் இறப்பும் வாழ்க்கையில் படும் துன்பமும் ஏன்? எதனால்? எப்படி? என தெரிய வேண்டாமா? ஆக துன்பமே வாழ்வாகிறது பலருக்கும்! ஏன்? உன் ஜீவனும் இன்பமாக வாழ வழி காணக் கூடாதா?

பிற உயிர்போல கருதியாவது உன் ஜீவனிடமும் கருணை காட்டு! இது தான் ஜீவகாருண்யம்! பிற ஜீவர்களிடம் கருணை காட்டுவது பரோபகாரம்! உன் ஜீவனை இரட்சிக்க அது ஒரு வழி! உன் ஜீவனை கருணையோடு பார்! உன் ஜீவன் கடைத்தேற யாது வழி?! உன் ஜீவன் முக்தியடைய சத்விசாரம் செய்! நீ யார்? எங்கிருந்து வந்தாய்? எதனால் வந்தாய்? ஏனிந்த துன்பம்? இது தீர யாது வழி? யாரிடம் போய் தெரிந்து கொள்வது? இதைச் சொல்ல வல்ல ஒரு ஞான சற்குருவை பணிந்து உபதேசம் தீட்சைகேள்! உன் ஜீவனை இரட்சிக்க வழி தேடிக் கொள்! ஞானிகள் அனைவரும் உரைத்த ஜீவகாருண்யம் இதுதான்! ஒவ்வொரு ஞானியும் முதலில் தன் ஜீவனை நேசித்து இறையருள் பெற்றனர்! ஞான தவம் செய்து தன் ஜீவனை சக்தியுள்ளதாக்கினர்! பின்னரே பிற ஜீவர்களுக்கு சேவை செய்தனர்! சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!!

முதலில் நீ உருப்படும் வழியைப் பார்? உன்னிடம் பொருள் இருந்தாலல்லவா பிறருக்கு உன்னால் உதவ முடியும்?! உன் ஜீவன் அருள் பெற்றிருந்தாலல்லவா பிற ஜீவர்களை நீ கருணையோடு கண்டு உதவ முடியும்?! வள்ளலார் என்ற ஜீவன் கடுந்தவம் செய்து அருட்பெருஞ் ஜோதியாகிய இறைவன் அருள்பெற்றதால் தான், இறைமயமானதால் தான் வாடிய பயிரைக் கண்டும் வாடினார்?!! அன்பும் கருணையும் தன்னுள்ளிருந்து தான் வெளிப்படணும்! அதற்கு முதலில் தன் ஜீவன் அன்புமயமாக கருணை இரக்கமே உருவாக, மலர நீ ஞான தவம் செய்! உன் ஜீவனை கருணையோடு பார்! வள்ளலார் தன் ஜீவனை பார்த்தார்! 9 வயதிலிருந்தே ஆன்மீக சாதனை செய்தார்! செய்தார் செய்தார் செய்து கொண்டேயிருந்தார்! செய்த தவம் பலித்தது! பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து இறைவன் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் ஆட்க் கொண்டார்! அருள்பெற்றார்! ஊன ஒளியுடலாக ஒங்கப்பெற்றார்! உடலே

இயேசுவும் பல்லாண்டு கடுந்தவம் இயற்றித்தான் தேவனாகிய கர்த்தரின் பிள்ளையானார்! இறந்தவர் உயிர் பெற்றதும், குருடர் பார்வை அடைந்ததும் ஏராளமான அற்புதங்கள் புரிந்ததும், இயேசு முதலில் தன் ஜீவனை இறைவனிடம் ஒப்புக் கொடுத்து இரட்சிப்பு பெற்றதால் தான்!!? முகமது நபியும், பகைவனுக்கும் இரக்கம் காட்டும் அன்பு இரக்கம் அருட்குணம் பெற்றதும், அல்லாவை எண்ணி தவம் இயற்றித்தான்!! கொடூரமாக வாழ்ந்த அரபு மக்களிடையே அன்பை விதைத்து அல்லாவை வணங்க வைத்தவர் முகமது நபியே! அவரின் ஜீவ சக்தியே! தன்னை கல்லால் அடித்து துரத்திய மக்களிடம் இரக்கம் கொண்டு அவர்கள் அறியாமையை போக்கி அல்லாவை உணரச் செய்தார்! தன் ஜீவனை கருணையோடு பார்த்து தவம் செய்தார் அதனால் தான் அன்பின் திருவுருவமாக முகமது நபி விளங்கினார்! அல்லா அவர் ஜீவனாக பரிமளித்தார்! இதுதான் ஜீவ காருண்யம்! சிலுவையில் அடித்தவன் செய்த தவறையும் மன்னிக்கும்படி வேண்டியவர் இயேசு! இதுதான் ஜீவ காருண்யம்! அன்பின் வெளிப்பாடு!

அன்பு என்ற ஒரு ஆயுதத்தால் கலிங்கம் வென்ற அசோகர் வீழ்ந்தார்! அன்பு எத்தகைய வலிமையுள்ளது என உணர்ந்தார்! போர் வெறி கொண்ட அசோகர் தன் தவறை உணர்ந்தார். எவ்வுயிரையும் கொல்வதில்லை என உறுதி பூண்டு புத்த மதத்தை தழுவினார்! அன்பு ஜீவர்கள் மேல் கொண்ட கருணையல்லவா அசோகரை மனிதனாக்கியது!? உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டு துறந்தவர் தானே புத்தர்! இது ஜீவ காருண்ய மில்லையா? துறவுக்கு இலக்கணம் புத்தர்தானே! இறைவன் அருளைப் பெறுவதற்கு ஜீவ காருண்யமே வழியாதலால், ஞான வழி என்பதும் சன்மார்க்கம் என்பதும் ஜீவ காருண்ய ஒழுக்கமே என்று வள்ளலார் உறுதியாக கூறுகிறார்! ஜீவ காருண்ய ஒழுக்கம் என்றால், ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வ வழிபாடு செய்து வாழ்தலே என்று ஜீவ காருண்ய ஒழுக்கம் நூலில் திருவருட்பிரகாச வள்ளலார் தெளிவாக கூறுகிறார்!

“துக்கப்படுகின்றவரை நமது சகோதரரென்றும் துக்கப்படுகின்றாரென்றும், துக்கப்படுவாரென்றும் அறியத் தக்க ஆன்ம அறிவு என்கிற கண்ணானது அஞ்ஞான காசத்தால் மிகவும் ஒளி மழுங்கின படியாலும், அவைகளுக்கு உபகாரமாக கொண்ட மனம் முதலான உபநயனங்களாகிய கண்ணாடிகளும் பிரகாச பிரதிபலிதமில்லாமல் தடிப்புள்ளவைகளாக இருந்த படியாலும் கண்டறிய கூடாமையாயிற்று!” இங்ஙனம் மனிதர்கள் இருப்பதால் தான் ஜீவ காருண்யம் இல்லாமல் போனது என்று வள்ளலார் தெளிவாக கூறுகிறார்! இதல்லாமல், ஜீவ காருண்யமுள்ளவராயிருப்பின் அவர் ஆன்ம திருஷ்டி விளக்கம் உள்ளவர் என அறியலாம்!! எவர் ஒருவர் தன் ஜீவனை கருணையோடு பார்த்து உபநயனமான இரு கண்களில் தடிப்பாயுள்ள கண்ணாடியான மனம் முதலானவைகளை அகற்ற தவம் செய்கிறார்களோ அவர்களே ஜீவ காருண்ய சீலராவார்! நம் கண்களே இறைவன் திருவடி என ஞான சற்குரு உபதேசம் தீட்சை மூலம் உணர்ந்து ஞான தவம் செய்து, கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து செய்வதால் கண்ணை மறைக்கும் 7 திரை விலகி ஆத்ம ஒளியை தன் ஜீவ ஒளியை காணலாம்! தன் ஜீவனை கருணையோடு பார்ப்பவரே காண்பர் ஒளியை!

ஜீவ காருணியம் கடவுளருளைப் பெறுவதற்கு முக்கிய சாதனம்! அதன் இயல்பும் அதுவே! அதாவது, கடவுளை அடைய முதலில் உன் கண்ணிலே துலங்கும் உன் ஜீவனை நேசி! இதுவே ஞான தவம்! தவம் மூலம் உன்னை நீ அறிவாய்! உணர்வாய்! நீயே ஜீவனே சிவனாகும்! அப்போது உன் இயல்பு அன்பு மயமே! வாடிய பயிரைக் கண்டு நீயும் வாடுவாய்! இது தான் ஞானநிலை! ஞானியின் நிலை!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது! மனித தேகத்தில் ஆன்ம விளக்கமும் அருள் விளக்கமும் மிகவும் விளங்குவதால், இப்பிறவி தப்பினால் இனி எப்பிறவி வாய்க்குமோ என்றிருப்பதால் இந்த தேகம் முக்தியின்பம் பெறுவதற்கே எடுத்த தேகமாதலாலும், அதற்குரிய வழியை நாட வேண்டும்! அவ்வழி, நம் விழியே! நம் ஜீவனை நாம் அடைய அதுவே வழி! விழியை நேசித்து ஒளியை பெருக்கி 7 திரையை அகற்றி ஆன்ம ஒளியை அடைவதே முக்தியின்பமாம்! இச்சாதனையே ஞான தவம்! ஞானம் பெற விழி! விழி விழி என விழித்திரு! விழிப்புணர்வுடன் இரு! விழியில் உணர்வுடன் இரு! இதுவே ஜீவ காருண்யம்!!

முதலில் உன் ஜீவனை இரட்சிக்கும் வழியை விழியைப் பார்! பின் பிற ஜீவர்களை பார்! இது சுயநலமல்ல! பொதுநலம் தான்! ஒரு ஜீவன் இரட்சிக்கப்பட்டால் உலகமே நன்மையடையுமே! அற்ப விசயங்களில் ஈடுபடாமல் உன் ஜீவனை கடைத்தேற்றி அதன்மூலம் உலகுக்கு உதவு! இதுதான் உண்மையான ஜீவ காருண்யம்! ஞானம் பெற்ற வள்ளலாரால் தான் உலகுக்கு மரணமிலா பெருவாழ்வு உபதேசிக்க முடிந்தது! ஞானம் பெற்ற புத்தரும் இயேசுவும் முகமது நபியும் உலகுக்கு செய்த நன்மை ஒன்றா, இரண்டா?! சக்தியுள்ளவன் தானே பிறருக்கு உதவ முடியும்! வழிகாட்ட முடியும்? வெறும் வாய்ப்பந்தல் போடாமல் செயலில் காட்ட முதலில் நீ ஞானதவம் செய்! சாப்பாடு மட்டும் போட்டால் போதாது? சாப்பாடு மட்டுமே வாழ்வல்ல?! எல்லாம் வேண்டும்?! மனித வாழ்வு சமையலறையிலிருந்து கழிவறை வரையல்ல!!! பூஜையறை என்று ஒன்று இருக்கிறதே தெரியுமா?! நிறைய வீடுகளில் சாமியறை கிடையவே கிடையாது! இருந்தாலும் பூட்டித்தான் வைத்திருப்பர்! வெள்ளி, செவ்வாய் விசேஷ நாட்கள் மட்டுமே பூஜை!?

பக்தியேயில்லாத பாமரர்களிடம் ஞானத்தை எங்கே தேடுவது?! கோவிலில் உருவத்தில் கடவுளை காணும் பக்தர்களும், யாகத்தில் அக்னியில் கடவுளை காணும் கர்மிகளும் கண்ணை மூடி இருதயத்தில் நினைக்கும் யோகிகளும் இன்னும் பற்பல வழிகளிலும் ஓடும் பாமரர்கள், நரகத்தை யாரும் விரும்பவில்லை ஆனால் பெரும்பாலோர் அடைவது அங்கேதான்! இப்படியெல்லாரும் தன் ஜீவனை கவனிக்காது புறத்தே இறைவனை தேடித்தேடி அலைகிறார்கள்! ஒரு பயனுமில்லை!? என்றைக்கு உன் ஜீவனை நீ கருணையோடு உன்னுள் பார்க்கிறாயோ? அன்று தான் உனக்கு முத்தி! இதைத்தான் வள்ளலார் உணர்த்துகிறார்! சாப்பாடு போட்டால் மட்டும் போதுமென்றிருந்தால் வள்ளலார் தர்மச்சாலையோடு நின்றிருப்பார்! எதற்கு சத்திய ஞானசபை கட்டினார்? யோசிக்க வேண்டாமா நீங்கள்!?

பக்தியால் ஞானம் பெற்று, இறைவனை கந்தகோட்டத்தில் திருவொற்றியூரில் சிதம்பரத்தில் இன்னும் பல ஊர்களில் கோயில்களில் கண்ட நமது திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் முடிவில் கண்டார் கடவுளை தன்னுள்ளே! முதலில் புறவழிபாடு! பின்னர் அகவழிபாடு! இதுவே நமக்கும் உபதேசம்!

புறத்திலே கண்ட உருவ இறைவனை, நம் உடலின் உள்ளே அருவமாக ஜோதியாக காண்பதே ஞானம்! புறத்திலே காண்பது பக்தி! அகத்திலே காண்பது ஞானம்! வள்ளலார் தன் அகத்திலே கண்ட அருட்பெருஞ் ஜோதியை நாமும் காண, நாமும் நம்மை உணர வேண்டியே வடலூரில் சத்திய ஞானசபை கட்டினார்! ஜீவகாருண்ய ஒழுக்கமே சன்மார்க்க நெறி!

உன் ஜீவனை, அது ஒளிவடிவம் ஜோதிஸ்வரூபம் அதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அம்சம் என்பதை அறிந்தாலே, உன் ஜீவனை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்தாலே, அது உன் இரு கண்ணில் துலங்குவதை அறிந்து கண் ஒளியை பெருக்கி ஆன்ம ஒளியை அடைய தவம் செய்! உன் ஜீவனை கருணையோடு பார்!! ஜீவகாருண்யம் இருந்தாலே, உன் உயிரை ஜீவனை நீ உணர்ந்தாலே ஆன்மநேய ஒருமைப்பாடு உடையவனாவாய்?!

உயிர்கள் இன்பம் பெற உதவுவதே ஜீவகாருண்யம்! உன் உயிர் பேரின்பம் பெற ஞானதவம் செய்! யாவும் தாமாய் விளங்கி, நாம் அதுவாவதே பரிபூரணஞானம்! இறைவனை அறிந்து உணர்ந்து அம்மயமாதலே ஞானம்! பேரொளியான அருட்பெருஞ்ஜோதியே இறைவன் பரம்பொருள் என அறிந்து உணர்ந்து அதுவே நம் ஜீவனாக உயிராக நம்முள்ளும் சிற்றொளியாக துலங்குகிறது என அறிந்து உணர்வதே ஞானம் பேரின்பம், முக்தி, மோட்சம்! அதற்கு முதலில் உன் ஜீவனை கருணையோடு பார்!

“சத்திய ஞான என்னுள் கண்டனன்” சபையை என வள்ளல் பெருமான் தன் அகத்தே கண்ட ஞான அருள் அனுபவத்தை உலகருக்கு காட்டவே சத்திய ஞான சபையை கட்டி 7 திரைநீக்கி ஜோதி தரிசனமும் காண்பித்தார்! உனக்குள் விளங்கும் அருட்பெருஞ்ஜோதியை காண முதலில் உன் ஜீவனை அருட்பெருஞ்ஜோதியை காண முதலில் உன் ஜீவனை கருணையோடு பார்!

பசித்திரு! தனித்திரு! விழித்திரு! என்றார்.

தர்மச்சாலையை கட்டி சாப்பாடு போட்ட வள்ளலார் ‘பசித்திரு’ என்றாரே என்ன பொருள்? சாப்பிடாமல் பட்டினி கிடக்கச் சொல்லவில்லை?! யாரும் சாப்பிடாமல் இருக்காதீர்கள்! அது நம் ஜீவனை வதைப்பதாகும் என்றும், தேவையறிந்து சுத்த சத்துவ சைவ உணவை கொள்ளுங்கள் என்றார்! அப்படியானால்! வயிற்றுப்பசியைப் பற்றி வள்ளலார் ‘பசித்திரு’ என சொல்லவில்லை? பின் எதைப் பற்றி?! ஆன்ம பசியைப் பற்றியே! எத்தனையோ பிறவி எடுத்து துன்பப்படும் ஆத்மா, என்று தான்? இந்த பிறவிச் சுழலில் இருந்து விடுதலை கிடைக்குமோ என ஏங்கி தவிக்கும்! அதன் தேவை விடுதலை பேரின்பம்! இது தான் ஆன்மாவின் பசி! அதற்கு உணவு கொடு! ஏ மனிதா உனக்கு தேவை ஆன்ம பசி! நீ உன் ஆன்மாவை உணர்! பேரின்பம் பெற வழிபாரு! ஆன்மபசியோடு இருக்கும் உனக்கு வயிற்றுப்பசி ஒரு பொருட்டாக இருக்கக் கூடாது என்பதற்காக கட்டினார் தர்மச்சாலை! ஆக தர்மச்சாலையும் சத்தியஞான சபை போல ஆன்மபசி நீக்கவே கட்டினார்!

நன்றாக சாப்பிட்டு விட்டு தனித்திருக்கவா சொன்னார்? உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டல்லவா? பட்டினி கிடந்தாலும் மயங்குவான்! சாப்பிட்டாலும் மயக்கம் கிறக்கம் தூங்குவான்!! இல்லாததாலும் மயக்கம் இருந்தாலும் மயக்கம்! இந்த மயக்கம் மாயை அகல சத்விசாரம் செய்! கூடியிருந்து செய்வது சத்சங்கம்! தனித்திருந்து செய்வது சத்விசாரம்! நீ யார் என சிந்தி! இது பற்றி சிந்திப்பதே சத்விசாரம்! அதற்கு தனித்துத் தான் இருக்க வேண்டும்!? கூட்டமே ஆகாது ஐயா! ஆன்மபசியோடு பசித்திரு! அறிவுப் பசியோடு தனித்திரு! கிட்டுமா? ஞானம்? ஜீவகாருண்யம் வேண்டும்! உன் ஜீவனை கருணையோடு பார்! பரிதவிக்கும் உன் ஆன்மா இளைப்பாற தூங்காமல் தூங்கு! சும்மாயிரு! ஆன்மா துலங்கும் உன் இருவிழியில் ஒளியைப்பார்! ஞானம் பெற விழி விழி என விழித்திருந்து தவம் செய்! கண்ணை திறந்து விழித்திருந்து தான் ஞானதவம் செய்யணும்! ஞானம் பெற “விழித்திரு!”

பசித்து தனித்து விழித்தால் மோட்சப் பதவிகிட்டும்! அதற்கு தேவை ஜீவகாருண்யம்! உன் ஜீவனை கருணையோடு பார்த்து ஞானதவம் செய்வதே ஜீவகாருண்யம்! ஆத்ம சாதனை! எத்தனையோ விதங்களில் நாம் மற்றவருக்கு உதவலாம்! அதில் ஒன்று தான் சாப்பாடு! சாப்பாடு போட்டால் ஞானம் வராது! ஓரளவு அன்பு அற்றார் அழி பசியாற்றலால் கிட்டும்! ஓரளவு போதாதே?

அன்பு மிகுதியாகி இரக்கம் உருவாகணும்! இரக்கம் தானே கருணையாக வெளிப்படும்! இரக்கமுள்ளதால் தானே வாடிய பயிரைக் கண்டு வாடினார்! தர்மச்சாலை கட்டினார்! கருணையிருந்ததால் தானே சத்திய ஞான சபை உருவாக்கி திருஅருட்பாவை தந்து மரணமிலா பெருவாழ்வுபெற நமக்கு வழிகாட்டும் விழியை காட்டிய ஞான சற்குருவாக விளங்குகிறார் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்! நாம் செய்த புண்ணிய பலனால் தான் இதை அறிகிறோம்!

சன்மார்க்க சங்கத்தவர்களே, அடியேன் உமது தாள் பணிந்து வேண்டுகிறேன்! சாப்பாடு போடுவதோடு “ஜீவகாருண்யம்” முடிந்து விடவில்லை! அதன் பிறகுதான் ஆரம்பிக்கிறது “ஜீவகாருண்ய ஒழுக்கம்”! யாருக்கு எப்படி வேண்டுமானாலும் உதவுங்கள் அது பரோபகாரம்! அது மட்டும் போதுமா? போதாது!

உன் ஆன்மா, ஒளி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரோடு ஐக்கியமாக வேண்டுமெனில் உன்னுடலும் வள்ளலார் போல் ஒளியுடலாக வேண்டும்! அதற்கு சாப்பாடுபோடும் ஜீவகாருண்யம், அன்பு இருந்தால் மட்டும் போதாது! உன் ஜீவனே அருட்பெருஞ்ஜோதியாக ஒளிர ஞானதவம் செய்யணும்! அதுதான் ஜீவகாருண்ய ஒழுக்கம்! ஜீவகாருண்யம் பரோபகாரம்! ஜீவகாருண்ய ஒழுக்கம். நீ உன் ஜீவனை அடைய வழிகாட்டும்! இது சத்விசாரம்!

நீ உன் ஜீவனை கருணையோடு பார்! அதற்கு நம் ஞானசற்குரு திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் கூறியதைப் போல, தகுந்த ஆச்சாரியன் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப்பெற்றுக் கொள்வது நலம்! குருவைப் பெற்றவனே குணசீலனாவான்! குருவே சாட்சாத் பரப்பிரம்மன்! குருவை பணி! குருகாணிக்கை கொடு! தீட்சைபெறு!

“சாகாதவரே சன்மார்க்கி!” என வள்ளலார் தெளிவாக கூறிவிட்டாரே! சாப்பாடு போட்டவனெல்லாம் செத்துத்தானே போனான்! அப்படியானால் அவனெல்லாம் சன்மார்க்கியல்ல! சாகாமலிருக்கணும்! சாகாமலிருக்க பால்கற! உச்சிப்பால் கற! அருந்து என சித்தர்கள் கூறியிருப்பதை பார்! ஞானதவம் செய்து நம் சிரசு நடுவில் உள்ளே இருக்கும் நம் ஜீவ ஸ்தானத்தையடைய நம் இரு கண்மணியில் துலங்கும் ஒளியை பிடித்து போகணும்! அங்ஙனம் போனால் அதுதான் முச்சுடரும் ஒன்றான இடம்தான், சிற்சபையும் பொற்சபையும் சொந்தமாக்கி உள்ளே மத்தியில் ஆத்ம ஜோதியை அருட்பெருஞ்ஜோதியை 7 திரை நீங்க தரிசிக்கலாம்!

அப்போது அங்கிருக்கும் வாலைத்தாய் அருளால் நம் சிரசிலிருந்து அமுதம் சொட்டு சொட்டாக நம் தொண்டையில் விழும்! அந்த அமுதம் சாப்பிட்டவர் சாகமாட்டார்! நரைதிரைமூப்பு விலகும்! பசிதாகம் அற்றுப் போகும் அவனே சன்மார்க்கி! அவனே சித்தன்! அவனே ஞானி! அமுதம் தரும் தாயே வாலை! எல்லா சித்தர்களும் வாலையருள் பெற்றே ஞானம் பெற்றனர்! வள்ளலாருக்கு வடிவுடையம்மன் – வாலையே ஒருநாள் அமுதூட்டி அருள்புரிந்தாள்! நாமும் வாலை அருள் பெற்றேயாக வேண்டும்!

ஜோதி தரிசனம் நமக்குள் கண்டேயாக வேண்டும்! நமக்குள் எப்படியிருக்கும் எத்தன்மையில் தோன்றும் என விளக்கவே சத்திய ஞான சபையில் வள்ளலார் ஜோதிதரிசனம் காணச் சொன்னார்கள்! வடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் கண்டாலே விளங்கும்! விழித்துப்பார் உன்னுள்ளே! உலகில் இதுவரை யாருமே செய்யாத அருஞ்செயல்! மாணிக்கவாசகர் ஆவுடையார் கோயில் அமைத்ததே அற்புதமாக இதுவரை இருந்தது!? கருவறையில் பீடம் மட்டுமே! ‘அ’ வுடையார் அருவமாகவே உள்ளார் என்ற விளக்கமே அது!? மாணிக்கவாசகரை எப்போதும் சிந்தையில் வைத்துப் போற்றிய வள்ளலார், அவருக்கு ஒருபடி மேலே போய் இதுதான் முடிந்த முடிபான ஞானம் என சத்திய ஞானசபை ஜோதி தரிசனம் காண்பித்தார்!! உலகர் மீது கொண்ட அன்பு – இரக்கம் – கருணையே வள்ளலார் அருளிய சத்திய ஞானசபை!!? வள்ளலார் கொண்ட கடைபிடித்த ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் பயனால் உலகருக்கு கிடைத்த ஞானப்பரிசு தான் சத்திய ஞானசபை! இதை அறிந்தவன் ஞானம் பெறுவான்!

இப்படி ஒப்புயர்வற்ற ஞானம் விளங்க வள்ளலார் உலகுக்கு உபதேசித்த ஞானத்தை பற்றி புரிந்து கொள்ளாமல் சாப்பாடு போட்டே காலந்தள்ளும். அறிவிலிகளை என்னென்று சொல்வது?! ஈடுஇணையிலாத மெய்ஞ்ஞானி திருவருட் பிரகாச வள்ளலார் பெயர் சொல்லும் ஒவ்வொருவரும் ஞானம் பெறணும்!! ஒளியுடல் ஆகணும்!! ஒளியுடல் ஆக்கும் ஞானமுயற்சியிலாவது இருக்கணும்!! இதுவே என் ஆசை!! வீணே காலத்தை கழிக்காதீர்கள்! உலகர் அனைவரையும் ஜாதி மத இன மொழி பேதங்களைந்து சகோதரர்களாக காணுங்கள்! இதுதான் சமரச சன்மார்க்க நெறி! பக்தியோடு ஜோதி வழிபாடு செய்யுங்கள்! வறட்டு வேதாந்தம் பேசி சுத்த சன்மார்க்கம் அசுத்த சன்மார்க்கம் என்று வாதம் செய்யாதீர்கள்! வள்ளலார் போல முக்காடுபோட்டு வேடம் போட்டு அலையாதீர்கள்! வள்ளலார் போல ஒளியுடல் பெற ஞானதவம் செய்யுங்கள்! ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைபிடியுங்கள்! “என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே” இப்படி கூறியவர் வள்ளலார்தானே! புரிந்து கொள்ளுங்கள்!

எல்லா மதத்தையும் ஞானிகளையும் போற்று! வள்ளலார் மட்டும் இந்த உலகை திருத்தவந்தவரில்லை! யுகம் யுகமாக ஞானிகள் அகஸ்தியர் முதலான சித்தர்கள் பலர் தோன்றிய நாடு நம் சநாதன புண்ணிய பூமி பாரதம்! வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபின் வழிவந்தவர் தாம் நம் வள்ளலார்! வள்ளலார் மீது பக்தி வேண்டியது தான்! அதற்காக மற்றவர்களை தூற்றாதே! வேதங்களும் புராண இதிகாசங்களும் பைபிளும் திருக்குர் ஆனும் இதுவரை தோன்றிய எல்லா ஞானநூற்களும் கடவுளை எல்லாம் வல்ல ஒரே கடவுளைப் பற்றியே கூறப்பட்டதாகும்! சமஸ்கிருதத்திலும் தமிழிலும் அரபியிலும், ஹீப்ரு மொழியிலும் கடவுள் பற்றியே கூறப்பட்டது! தண்ணீர், வெள்ளம், நீரு, பானி, வாட்டர் என கூறியது ஒன்றுதானே! அது போலவே பல மொழியிலும் அருளாளர் பலரும் ஒரே கடவுளைப் பற்றியே கூறினர்! இது புரியாதவன் மடையன்!! ஒன்றான கடவுளை வெவ்வேறாக எப்படிச் சொல்ல முடியும்?! அன்பே கடவுள்! அன்புக்கு ஏது மதம்? ஏது ஜாதி? ஏது மொழி? அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்!”

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோவில் நடந்த சர்வசமய மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். ஆரம்பமே, சகோதர சகோதரிகளே என்று தான் ஆரம்பித்தார்! ஆரம்பமே, இந்திய நாட்டின் சநாதன தர்மம் இதுதான் என்று பறைசாற்றி விட்டார்! உலக மக்கள் அனைவரும் சகோதர சகோதரிகள் என்றால், உலகை படைத்த ஒரே இறைவனே நம் எல்லோருக்கும் அம்மையப்பன் தானே! இதுதான் ஞானம்! இதை உணர்த்தத்தான், உலகம் சுபிட்சமடைய வேண்டுமென்று தான் ஒவ்வொரு ஞானியும் படாதபாடுபட்டார்கள்!

இப்போதாவது புரிந்து கொண்டதா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்!? உலகருக்கு இந்த ஞானம் விளங்கியிருந்தால், ஜாதி சண்டை, மத சண்டை, மொழி சண்டை, இனச் சண்டை, நாட்டுச்சண்டை நடந்துகொண்டிருக்குமா?! என் மதம் தான் உயர்ந்து விளங்குகிறது எனக் கூறுவதை எல்லா மதத்தவரும் முதலில் விடுக! ஒரே கடவுளைப் பற்றி சொன்னவர்களுக்குள் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? எல்லோரும் போதித்தது அன்பைத்தானே! அறிவு துலங்க ஞான தவத்தைப் பற்றித் தானே கூறினார்கள்! பின் எப்படி வேறுபடும்!!

உலகம் ஒன்றே! உலகுக்கு இறைவனும் ஒருவரே! “யாதும் ஊரே யாவரும் கேளீர்!” “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்!” எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! இவை தானே நல்ல போதனைகள்! உலகர் மனதில் இடம் பெற வேண்டிய திருவசனங்கள்! பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய வாசகங்கள்! படியுங்கள்! உணருங்கள்! பண்படுங்கள்! செயல்படுங்கள்! வாழுங்கள்! வாழவிடுங்கள்! ஞானதவம் செய்யுங்கள்! ஞானதானம் செய்யுங்கள்!

“கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக!”

சத்திய தர்மச்சாலை வள்ளலாரால் 23-05-1867-ல் பிரபவ வருடம் வைகாசி மாதம் 11-ம் நாள் நிறுவப்பட்டது! அன்றிலிருந்து இன்று வரையும் தொடர்ந்து 145 ஆண்டுகளாக வருமன்பர்களுக் கெல்லாம் உணவு கொடுத்து வருகிறது! வள்ளல் பெருமான் கையால் ஏற்றிய அடுப்பு இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது! தினமும் வடலூர் வரும் பக்தரெல்லாரும் உணவு அருந்திச் செல்கிறார்கள்! வள்ளலாரால் ஏற்றப்பட்ட விளக்கும் இன்றும் ஒளிவிட்டு பிரகாசிக்கின்றது! வாருங்கள்! பிரசாதம் சாப்பிட்டுச் செல்லுங்கள்!

சத்திய ஞானசபை வள்ளலாரால் 25-01-1872 பிரசோற்பத்தி வருடம் தை மாதம் 13-ம் நாள் பூச நாளில் தொடங்கப்பட்டது! முதன் முதலாக ஜோதி தரிசனம் அனைவருக்கும் காட்டப்பட்டது! கண்டனர் புண்ணியசாலிகள்! சத்திய ஞானசபை இயற்கை விளக்கம் என்பார் பெருமானார்! அகத்தே காணுதற்குரிய அனுபவத்தை புறத்தே பாவனையாகக் காட்டுவதே சத்திய ஞானசபை! நம்மிடமுள்ள அஞ்ஞானமாகிய 7 திரைகள் நீங்கப்பெற்றால் நம் ஆன்ம ஒளியாகிய அருட்பெருஞ்ஜோதியை தரிசிக்கலாம் மெய்ஞ்ஞானம் துலங்கும்!! “சத்திய ஞானசபை என்னுட் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்” என்றார் வள்ளலார்!

சன்மார்க்கத்தின் முடிவு சாகாதிருப்பதே! சாகாதவனே சன்மார்க்கி! முத்தேக சித்திபெற்ற முழுமுதற்ஞானி நம் வள்ளலார்! ஒளியுடல் பெற்றார்! நித்திய தேகம் பெற்றார்! ஸ்ரீமுக ஆண்டு தை மாதம் 19-ம் நாள் 30-01-1874 வெள்ளிக்கிழமை இரவு 15 நாழிகைக்கு மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருவறையில் திருக்காப்பிட்டுக் கொண்டு அருட்பெருஞ் ஜோதியாண்டவரோடு இரண்டறக் கலந்தார்கள்! மரணமிலா பெருவாழ்வு பெற்று ஒப்பற்ற ஞானியானார்கள்!

வள்ளலாரே நம் குரு! ஞான சற்குரு! உலகின் ஒரே மெய்ஞ்ஞான இணையதளம்!

www.vallalyaar.com

எல்லா உயிர்களிடமும் நீ காட்டும் அன்பு! வறியவர்களிடம் நீ காட்டும் பரோபகாரம்! ஞானசற்குருவை பணிந்து வள்ளல் பெருமான் சொன்னது போல் “நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைந்து” இவ்வண்ணம் ஞானதவம் செய்யணும்! உன் ஜீவனை, நீ உன் கண்ணில் துலங்கும் ஒளியை பெருக்கி அடைந்தால், இவ்வண்ணம் ஞானசாதனை செய்தால், உன் ஜீவன் மீது கருணை காட்டினால் தான்! உன் ஜீவன் இரட்சைபட்டால் தான் உனக்கு மோட்சம் கிட்டும்! வாலைத்தாய் அமுதம் தந்து பரிபூரண ஞானமும் அருள்வாள்! உன் ஜீவனை கருணையோடுபார்! மோட்ச வீட்டின் வாசல் கதவு திறக்கும்! அருட்பெருஞ்ஜோதியாகலாம்! வள்ளலார் உடனிருந்து காத்தருள்வார்!

கடவுள் ஒருவரே! உலகமக்கள் அனைவரும் அவர் பிள்ளைகளே! நம் உடலில் தலையின் உள் நடுவே விளங்கும் நம் ஜீவனை அடைய, நம் உடலின் உள்புகவாசல் நமது கண்களே! உலகம் இதை உணரவேண்டும்! இரகசியங்களை பரிபாஷைகளை விளக்கி கூறியுள்ளோம்! ஜாதி மதம் இனம் மொழி நாடு கிடையாது! நாமனைவரும் மனிதர்கள்தான்! பார்த்தால் கிட்டும் ஞானம்!

“ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்”

ஞானம் பெற விழி! நம் கண்களே இறைவன் திருவடி! ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

வள்ளலார் வாழ்க்கை குறிப்பு
இயற்பெயர் : இராமலிங்கம்
சிறப்புபெயர் : திருஅருட்பிரகாச வள்ளலார்
பிறப்பு : 5-10-1823 சுபானு-புரட்டாசி 21 ஞாயிறு சித்திரை நட்சத்திரம்
பிறந்தஊர் மருதூர் – வடலூரிலிருந்து 7மைல்
தந்தையார் : இராமையா
தாயார் : சின்னம்மை
உடன்பிறந்தோர் : சபாபதி, பரசுராமன், சுந்தரஅம்மை, உண்ணாமுலை அம்மை
திருமணம்,மனைவி : சகோதரி உண்ணாமுலை மகள் தனம்
வாழ்ந்தகாலம் : 1823-1874, 51 வயது
சித்திபெற்றது : 30-1-1874, ஸ்ரீமுக-தை 19 வெள்ளி
உருவாக்கியவை : சன்மார்க்க சங்கம்-1865 சத்திய தருமச்சாலை-1867 சித்திவளாகம் 1870 சத்தியஞானசபை – 1872
இயற்றிய நூல் : திருஅருட்பா 6 திருமுறைகள்
பெற்ற பேறு : மரணமிலாபெருவாழ்வு – ஜோதியானார்
வழிபடு கடவுள் : முருகன், சிவன்
வழிபடு குரு : திருஞான சம்பந்தர்
வழிபடு நூல் திருவாசகம்
முடிவில் ஞானம் : அருட்பெருஞ்ஜோதி அடியார் பக்திமுத்தி ஞானசித்திபெற்ற ஞானியானார்

ஆன்மீக செம்மல் ஞானசற்குரு சிவசெல்வராஜ் அருளிய மெய்ஞ்ஞான நூற்கள்

உலகில் இதுவரை இரகசியமாக இருந்து வந்த ஞான இரகசியங்கள், பரிபாஷை விளக்கங்கள் எல்லாம் இந் நூற்களில் எளிதாக புரியும்படி எடுத்துரைக்கப் பட்டுள்ளது.

கண்மணி மாலை 1.

  1. கண்மணி மாலை
  2. அருள்மணி மாலை
  3. ஸ்ரீ பகவதி அந்தாதி
  4. அஷ்டமணி மாலை -8 நூற்கள்
  5. ஜோதி ஐக்கூ அந்தாதி
  6. சனாதன தர்மம்
  7. வள்ளல் யார்
  8. இயேசு எழுபது
  9. ஞானக்கடல் பீர்முகமது
  10. திருவருட்பா -4 பாகங்கள்
  11. சாகாக் கல்வி
  12. மந்திரமணி மாலை
  13. திருவருட்பா தேன்
  14. அகர உகர மாலை 6 நூற்கள்
  15. ஞானமணி மாலை 4 நூற்கள்
  16. திருவாசக மணிமாலை
  17. பரம பதம்
  18. ஆன்மநேய ஒருமைப்பாடு
  19. Who is Philanthropist Vallalar
  20. Spiritual Education for Deathlessness
  21. ஞானம் பெற விழி
  22. ஜீவகாருண்யம்
  23. மூவர் உணர்ந்த முக்கண்
  24. உலககுரு வள்ளலார்
  25. WORLD GURU VALLALAR
Scroll to Top