சுத்த சன்மார்க்க சாதனம்

ஒரு கருத்தை சொல்லி அதற்க்கு ஒரு உதாரணமும் சொன்னால் முதலில் நமக்கு எது புரியம்?
உதாரணம் தானே எளிதாக புரிய வேண்டும். கருத்தை சரியாக புரிந்து கொள்வதற்க்குத்தான் உதாரணம்! சரிதானே!

மேலே குறிபிட்டுள்ள கருத்தை உள்வாங்கி பின் கீழே உள்ள பதிப்பை படிக்கவும்.

சுத்த சன்மார்க்க சாதனம் என்ற தலைப்பில் வள்ளல் பெருமான் இவ்வாறு எழுதியுள்ளார்கள்

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவெனில்:

“எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை. உதாரணம் அருட்பெருஞ் சோதி ஆண்டவர் சொல்லியது. “கருணையுஞ் சிவமே பொருள் என காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருள் நெறி”

மேலே வள்ளல் பெருமான் முக்கிய சாதனம் என்ற ஒன்றை சொல்லி அதற்க்காக ஒரு உதாரணத்தையும் சொல்கிறார். வள்ளலார் சொன்ன கருத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் என்ன செய்ய வேண்டும்? சரியாக சிந்தியுங்கள்!

ஒரு கருத்தை சொல்லி அதற்க்கு ஒரு உதாரணமும் சொன்னால் முதலில் நமக்கு எது புரியம்?
உதாரணம் தானே எளிதாக புரிய வேண்டும். கருத்தை சரியாக புரிந்து கொள்வதற்க்குத்தான் உதாரணம்! சரிதானே!

இங்கு வள்ளலார் சொன்ன கருத்தையும், உதாரணத்தையும் தனித்தனியாக படியுங்கள் எது எளிதாக புரிகிறது என்று பார்ப்போமோ?

1. வள்ளலார் சொன்ன கருத்து எது (முக்கிய சாதனமாக சொல்வது)
எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை.

2. வள்ளலார் சொல்லும் உதாரணம் என்ன?
கருணையுஞ் சிவமே பொருள் என காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருள் நெறி

மேலே உள்ள இரண்டில், கருத்து எளிதாக புரிகிறதா இல்லை உதாரணம் எளிதாக புரிகிறதா?

இங்கு கருத்துதான் எளிதாக புரிவது போல இருக்கும். உதாரணம் புரிந்து கொள்வத்ற்க்கு கடினமாக இருக்கும்.
“எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை” மேலோட்டமாக எல்லார்கிட்டவும் அன்பாக இருக்கனும் அவ்வளவுதானே என்று தோன்றும். இந்த இடத்தில்தான் சன்மார்க்க அன்பர்கள், நாங்கள் அன்பாகத்தான் இருக்கிறோம் அவ்வளவுதான் என்று கோட்டை விட்டு விடுகிறார்கள். ஆனால் நிச்சயமாக நம்மால் இதை புரிந்து கொள்ளவோ உணர்ந்து கொள்ள முடியாது அதனால்தான் அதற்க்கு ஒரு உதாரணத்தையும் திருஅருட்பிரகாச வள்ளலார் சொல்கிறார்கள்.

“கருணையுஞ் சிவமே பொருள் என காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருள் நெறி”
இது புரிகிறதா என பல சன்மார்க்க அன்பர்களிடம் கேட்ட பொழுது புரியவில்லை என்றார்கள். ஒரு கருத்து சரியாக, எளிதாக புரிய வேண்டுமே என்பதற்க்காக சொன்ன உதாரணமே புரிய வில்லை எனில் கருத்து எங்காவது புரியுமா?

சீவர்களிடத்தில் தயவும் , ஆண்டவரிடத்தில் அன்பும் என்பதற்கு வள்ளல் பெருமான் என்ன கூறி உள்ளார் என்பதை பாப்போம்.

சீவர்களிடத்தில் தயவு:
ஜீவகாருண்ய நூலில் இன்று ஜீவர்களிடம் தயவு என் இல்லாமல் போனது என்றும் குறிப்பிட்டுளார்:

“துக்கப்படுகின்ற சீவரைத் தமது ஆன்ம இனமென்றும் துக்கப்படுகின்றாரென்றும் துக்கப்படுவாரென்றும் அறியத்தக்க ஆன்ம அறிவு என்கின்ற கண்ணானது அஞ்ஞான காசத்தால் மிகவும் ஒளிமழுங்கின படியாலும் அவைகளுக்கு உபகாரமாகக் கொண்ட மனமுதலான உபநயனங்களாகிய கண்ணாடிகளும் பிரகாசப் பிரதிபலித மில்லாமல் தடிப்புள்ளவைகளாக இருந்தபடியாலும் கண்டறியக் கூடாமையாயிற்று. அதனால் ஆன்மஉரிமை இருந்தும் சீவகாருணியமில்லாமல் இருந்ததென் றறியவேண்டும்.”

“மலம் முற்றும் நீங்கித் தயா வடிவமாவதே சிவமாதல்” – உரைநடை

மேல் கூறி உள்ளதை நன்றாக படியுங்கள். நமது ஆன்ம அறிவு அஞ்ஞான காசத்தால் ஒளி குறைந்து உள்ளது. இதனாலே அந்த ஒளியை வெளிபடுத்தும் மனம், உபநயனம் (நயனம் என்றால் கண்கள் , உப என்றால் இரண்டு – இரண்டு கண்கள்) வினை திரையால் தடிப்புள்ளதாக இருக்கிறது. இந்த தடிப்பை – திரையை நீக்கினாலே ஆன்ம அறிவு பிரகாசிக்கும். இதை தான் வள்ளல் பெருமான் திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டி உள்ளார். எவர் ஒருவர் தனது திரையை நீக்கி தன் ஆன்ம அறிவை பிரகாசித்து – ஆன்ம தரிசனம் காண்கிறாரோ அவருக்கு தான் தயவு என்பது உண்மையில் உண்டு.

இந்த திரையை நீக்க வள்ளல்பெருமான் இரண்டு விசயங்களை செய்ய வேண்டும் என்கிறார்

1. பரோபகாரம் 2. சத்விசாரம். அவை

“பரோபகார மென்பது யாது? தேகத்தாலும் கரணத்தாலும் இந்திரியத்தாலும் திரவியத்தாலும் ஆன்மாக்களுக்கு உபகரித்தல், திரவிய”ம் நேராத பட்சத்தில், திரிகரண சுத்தியாய் ஆன்மநேய சம்பந்தமான தயா விசாரத்தோடு எல்லாச் சீவர்களினது வாட்டத்தைக் குறித்தும் பிரார்த்தித்தல். சத்விசாரமென்பது கடவுளினது புகழையும் ஆன்மாவின் தரத்தையும் நமது சிறுமையையும் கடவுளின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து, நமது குறையெல்லாம் கடவுளின் திருவடியில் விண்ணப்பிப்பது.”

சத்விசாரதிற்கு பெரும் விளக்கமே அளித்துள்ளார் வள்ளலார். அதை அறிய இந்த லிங்கை பார்க்கவும் திருவடி தீட்சை

ஆகா உண்மையாக ஜீவர்களிடம் தயவு துலங்க வேண்டுமானால் நம்மிடமுள்ள திரை விலக வேண்டும்.

அடுத்து ஆண்டவரிடத்தில் அன்பு:

ஆண்டவரிடத்தில் – ஆண்டவரை அடைய வேண்டும் என்று வள்ளலார் எவ்வளவு ஆர்வம் , முயற்சி கொண்டிருந்தார் என்று தெரிய வேண்டும் என்றால் திருவருட்பாவின் பாடல்களே சான்று.

இறைவனிடம் அன்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டின் வள்ளல் பெருமான் அன்பு உருவமாக கூறி உள்ள இந்த வாசகத்தை நினைவில் வையுங்கள்:

அன்புருவம்

கடவுளைக் காண உண்மையாய் விரும்பினால், அழுத கண்ணீர் மாறுமா? ஆகாரத்தில் இச்சை செல்லுமா?

இதையே வள்ளல் பெருமான் ஜோதியாகி மறைவதற்கு முன் அன்பர்களிடம் “ஞான சரியையில்” உள்ள 28 பாடல்கள் கண்டபடி தெய்வத்தினை ஆராதியுங்கள் என்கிறார்.

ஞான சரியை முதலில் படியுங்கள் வள்ளலார் எந்த அளவு நாம் இறைவனிடம் ஒன்ற வேண்டும் என்பது வெளிப்படும். பக்தியோடு இறைவனை துதியுங்கள் என்றும் , மெய்பொருளை நன்கு உணருங்கள் என்றும் , உலக பற்றை விடுங்கள் என்றும் பல இடங்களில் வலியூருத்தி உள்ளார்.

ஞான சரியையின் பாடல்களே ஞான தவம் ஆகும்.

இப்போது புரிந்ததா சீவர்களிடத்தில் தயவும் , ஆண்டவரிடத்தில் அன்பும் என்பதற்கு உள்ள விளக்கங்கள்.
தான்தோன்றி தனமாக நாமாக படித்து செயல்பட்டால் உண்மை அறியமுடியாது என்பதால் தான் வள்ளலார் பல இடங்களில் குருவை பெறுங்கள் , குருவை பணியுங்கள் , குருவை வணங்குங்கள், குருவுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கூறி உள்ளார்கள்.

வள்ளல் பெருமான் கூறி உள்ள உதாரணத்திற்க்கு எங்கள் குரு நாதர் ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள்- திருஅருட்பாமாலை – நாலஞ்சாறு என்ற புத்தகத்தில் அருமையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் அதை உண்மை தேடும் அன்பர்கள் படித்து புரிந்து கொள்ளுங்கள்.

“கருணையுஞ் சிவமே பொருள் என காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருள் நெறி” – பாடல் 94

இந்த பாடல் திருவருட்பா “பிள்ளை பெரு விண்ணப்பம்” என்ற பகுதியில் வருகிறது.

விளக்கம்

கருணையே இரக்கமே அன்பே சிவம்! சிவமே – ஒளி! எல்லாம வல்ல அருள் மயமான பெருஞ்சோதியே சிவமே கருணையின் திருவுருவம்! இதுவே பொருள் – மெய்ப் பொருள். அந்த மெய்ப்பொருள் எது எனவும் கூறி விட்டார்? காணும் காட்சி! காணும் காட்சி எதனால் காண முடியும்? காட்சிகள் எதனால் கிடைக்கும்? கண்ணால் தானே.
கண்ணால் தானே காட்சிகள் கிடைக்கும்! கண்மணி ஒளியே மெய்ப்பொருள்! கண்ணின் ஒளியுடன் கருணை கொணடவனே மனிதன்! மகாத்மா! ஞானி! கண்ணில் கருணையோடு சிவத்தோடு திகழ்வதே அருள் நெறி! உன்னத நெறி! உலகை உய்விக்கும் சன்மார்க்க நெறி! சனாதனதர்ம நெறி! ஏனையவை மயக்கத்தை தரும் மருள் நெறி!

Share

Leave a comment